ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி

108 வைணவ திருத்தலங்களில் உறையும் பெருமாள்களில் மூவருக்கு மட்டுமே அழகர் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவர் திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மற்றொருவர் மதுரை கூடலழகர், மூன்றாமவர் திருச்சி அன்பில் வடிவழகர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான அன்பில் சுந்தரராஜப்பெருமாள் உற்சவரான வடிவழகருக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதற்கென அன்பில் சுந்தரராஜப்பெருமாள் உற்சவர் நேற்று அதிகாலை புறப்பட்டு உத்தமர் கோவில் மண்டபம் வந்து சேர்ந்தார்.

 அங்கு அவருக்கு வரவேற்பு, திருவாராதனங்கள் நடந்தன. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இரவு வரை அங்கிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த சுந்தரராஜப்பெருமாள் இரவு 11 மணியளவில் அன்பில் புறப்பட்டார்.

 அன்பில் பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், இருகோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். மாசிமகத்தையொட்டி உத்தமர்கோவில் புருஷோத்தமபெருமாள் உற்சவர் கொள்ளிடம் தென்கரை பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார்.

தொடர்புடைய செய்தி