திருச்சி: ஏலசீட்டு பணம் செட்டில்மெண்ட்; நீதிமன்ற உத்தரவு

திருச்சியில் ஏலச் சீட்டில் முதலீடு செய்து, தொகை திரும்ப கிடைக்காத 49 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ. 17.84 லட்சம் வழங்கப்பட்டது. 

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் பொதுமக்கள் பணம் செலுத்தி, முதலீட்டு தொகையை திரும்ப வழங்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கடந்த 1997ம் ஆண்டில் காந்திசந்தை காவல்நிலையத்தில் பதிவான இந்த வழக்கு, பின்னர், பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கில் விசாரணை நடத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 49 முதலீட்டாளர்களுக்கு 17,84,017 ரூபாயை வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன்பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் முதலீட்டாளர்கள் செலுத்திய தொகை 2 சதவீத வட்டியுடன் நேற்று வழங்கப்பட்டது என பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி