முசிறி நகர்மன்ற கூட்டம்; பட்டை நாமத்துடன் வந்த கவுன்சிலர்

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. நகர மன்றத் தலைவராக கலைச்செல்வி சிவகுமார் பதவி வகிக்கிறார். இந்நிலையில் முசிறி நகராட்சி நிர்வாகத்தால் பிளீச்சிங் பவுடர் வாங்கியதிலும் அலுவலகத்துக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் வாங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறி திமுகவைச் சேர்ந்த 20வது வார்டு உறுப்பினர் தனசேகரன் கழுத்தில் பேனா, பென்சில், சிறு நோட்டு அடங்கிய மாலையுடனும், பிளீச்சிங் பவுடர் சட்டியை ஏந்தியவாறும், பட்டை நாமம் போட்ட பதாகையை வைத்துக் கொண்டு கூட்டத்தில் வந்து கலந்து கொண்டார். 

மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். மேலும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். கவுன்சிலர் தனசேகரன் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். கவுன்சிலர்கள் வெளியே சென்றதை அடுத்து அவரும் "கூட்டம் முடிந்தது, நீங்களும் கிளம்புங்கள்" எனக் கூறி வெளியே சென்றார். கடைசியில் கூட்டத்தின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நகர்மன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட கூட்ட மன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கூட்ட மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி