மண்ணச்சநல்லூர் பூமிக்கு அடியில் ஐம்பொன் சிலைகள்

மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் பழமையான மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது இடத்தில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக பணியாட்களை வைத்து குழி தோண்டியுள்ளார். அப்போது 8 அடி ஆழப் பள்ளத்தில் 3 சாமி சிலைகள் அதனுடன் சில பொருட்களும் தென்பட்டுள்ளன. 

இதை அனைத்தையும் மீட்ட அவர் இதுகுறித்து திருச்சி சரக ஐ.ஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சிலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சிலைகள் ஐம்பொன்னினால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தெய்வங்களின் சிலைகள் என்பதும் அதனுடன் மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்குப் பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்புப் பொருட்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றன

தொடர்புடைய செய்தி