திருச்சி: தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தரைக்கடை வியாபாரிகளுக்கென தனியிடம் ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மேலச் சிந்தாமணி, பழைய கரூர் சாலை, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் கடந்த 20 ஆண்டு காலமாக தரைக்கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகளை கடைகளுடன் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி சில தினங்களுக்கு முன்பு நிகழ்விடம் சென்று நிலைமை குறித்த விவரம் கேட்டுள்ளார். அப்போது, அங்கு ஏராளமானோர் சூழ்ந்து கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் மற்றும் அப்பகுதியினர் என இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் செல்வியை தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிஐடியு தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி