இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு கோயில் சார்பில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருச்சி மாநகரில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்றிரவு வரை பக்தர்கள் அணி அணியாக வந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்வர்.