எட்டயபுரம்: நள்ளிரவில் கிராம மக்கள் போராட்டம்

எட்டயபுரம் அருகே கீழஈராலை அடுத்த தம்பாலூரணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிமுருகன் (35). இவர் நேற்று இரவு கீழஈரால் கிராமத்துக்கு வந்துவிட்டு மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக நான்கு வழிச்சாலையைக் கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சீனிமுருகன் மீது மோதியது. விபத்தில் சீனிமுருகன், மோட்டார் சைக்கிளில் வந்த எட்டயபுரத்தைச் சேர்ந்த மகாராஜன் (20), கணேசன் (42) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, விபத்து நடந்த தகவல் அறிந்து அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்களது கிராமத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இது குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மேம்பாலம் அமைக்காமல் காலந்தாழ்த்தி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி