திருச்செந்தூர்: தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு

திருச்செந்தூரில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து உயிரிழந்த தனியார் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுடலை மணி (40). மாற்றுத் திறனாளியான இவர், திருச்செந்தூர் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். 

இவர் கடந்த 8-ஆம் தேதி திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள பாதாள சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக, சுடலை மணி சக பணியாளர்களுடன் கழிவுநீர் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றாராம். அடைப்பை சரி செய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கிய போது, கழிவுநீருக்குள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடற்கூறாய்வு பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தப்பணியின்போது உயிரிழந்த அவரின் குடும்பத்தினருக்கு நகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை திருச்செந்தூர் நகராட்சி பொறியாளர் சரவணன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி