திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முகூர்த்த நாளில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். 

இன்று விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயகால அபிஷேகமும், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து மற்ற காலப் பூஜைகளும் நடந்தன. சுப முகூர்த்த நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. இன்று காலை 9.15 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பக்தர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு கடலில் புனித நீராடினர்.

தொடர்புடைய செய்தி