சட்டநாதர் ஆலயத்தில் 100 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம்

தென்னகத்து சீர்காழி என போற்றப்படும் கொங்கராயகுறிச்சி மிகவும் பழமையான சட்டநாதர் ஆலயத்தில் சுமார் 100 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தினை செங்கோல் மடாதீனம் துவக்கி வைத்தது. கொங்கராயகுறிச்சி சிவன்கோயில் பழமை வாய்ந்தது. நவலிங்கபுரங்களில் இந்த தலம் இரண்டாவது தலம். இங்கு சட்டநாதர் சிறப்பாக காட்சியளித்ததால் தென்னகத்து சீர்காழி என்று போற்றப்படுகிறது. மேலும் தேய்பிறை அஷ்டமி மிகச்சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. 

இங்குள்ள பொன்னுறுதி அம்மன் சமேத வீரபாண்டீஸ்வரர் கேட்டவரம் தரும் பெருமானாக இருப்பதால் இங்கு தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துவருகிறார்கள். சுமார் 100 வருடகாலமாக இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என பக்தர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் தற்போது கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 6ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக பணி துவங்கியது. 

தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 8ஆம் தேதி காலை கடம் புறப்பாடு நடந்தது. அதன்பின் காலை 7.35 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி