தூத்துக்குடி: பேருந்தில் பர்சை ஆட்டைய போட்ட பெண்.. வைரல் வீடியோ

தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் மணிப்பர்சை ஆட்டியபோட்ட பெண்; போலீசார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பயணம் செய்த பெண் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இறங்கும்போது தனது பணப்பை (மணிப்பர்ஸ்) தேடினார். 

அப்போது பணப்பை காணாமல் போனதைத் தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட மத்திய பாகம் போலீசார், தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைத் தேடியபோது, வீடியோவில் மஞ்சள் நிற சேலை மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருந்த பெண் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் ஏறி ஜெயராஜ் ரோட்டில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். இறங்கப் போகும் முன் அந்தப் பெண் அவரது மணிப்பர்சை திருடியது சிசிடிவி காட்சியில் தெரிந்தது. இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். மேலும், அந்த மணிப்பர்சில் 3,000 ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்ததும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி