தஞ்சை: ஆடிட்டரை மிரட்டி கோடி ரூபாய் பணம்பெற்ற காவல் ஆய்வாளர் கைது

திருவிடைமருதூர் தாலுக்கா, குலசேகரநல்லூரில், கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை அரசு கையகப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. இதில், கும்பகோணம், ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் (68) என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இதன் பிறகு, இந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த் துறையினர் மரங்களைப் பறிமுதல் செய்தனர். 

இதையறிந்த அரியலூர் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் நெப்போலியன் (45) என்பவர் தான் ஆய்வாளர் எனவும், ஆட்சியர் தனது உறவினர் எனவும் கூறி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வைப்பதாக கூறி, ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார். மேலும், அடிக்கடி ரவிச்சந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்டக் குற்றப்பிரிவுக்கு மாவட்ட எஸ்.பி. ராஜாராம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நெப்போலியனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி