தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை கூழவாரித்தெருவை சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 64). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த 8 வயது சிறுமியை நைசாக பேசி அழைத்துச்சென்றுள்ளார்.அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமி அழுது கொண்டே வந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து காட்டுராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி தமிழரசி விசாரணை நடத்தி காட்டுராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.