தஞ்சை: மரணம் அடைந்த தாயிடம் ஆசீர்வாதத்துடன் தேர்வு எழுத சென்ற மாணவி

பட்டுக்கோட்டை வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். 

தற்போது தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி காவியாவிற்கு இன்று (பயாலஜி) உயிரியல் தேர்வு. இன்னும் சற்று நேரத்தில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை உயிரிழந்தது காவியாவிற்கு சோகத்தையும் ஏற்படுத்தியது. 

படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட காவியா தன் தாய் வீட்டில் இறந்துகிடக்கும் நிலையில் இன்று காலை உயிரியல் தேர்வு எழுதுவதற்கு ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தற்போது வந்துள்ளார். காவியா தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு இறந்துகிடந்த தனது தாய் கலாவின் காலில் கதறி அழுதபடியே விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இதைப் பார்த்த அருகிலிருந்த கலாவின் உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்புடைய செய்தி