மயிலாடுதுறை: கா்ப்பத்தை கலைக்க மனைவியை தாக்கியவா் கைது

மயிலாடுதுறை அருகே மனைவியின் கர்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (36), குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி கிராம நிர்வாக அலுவலர். மனைவி சுமத்ரா (29), மகளுடன் மயிலாடுதுறை திருவிழந்தூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தார். சுமத்ரா மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், மற்றொரு குழந்தை வேண்டாம் எனக்கூறி கர்ப்பத்தை கலைக்க பிரபாகரன் கட்டாயப்படுத்தி உள்ளார். 

இதனை சுமத்ரா ஏற்காததால் தம்பதியினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பத்தில் வளரும் குழந்தையை கலைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக பிரபாகரன் சுமத்ராவை மிரட்டி தாக்கினாராம். இதுகுறித்து, சுமத்ரா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி