திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை மூலவர் முருகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க கவசம், தங்க வேல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் சண்முகப் பெருமாளுக்கும் வள்ளி- தெய்வானை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் விரதம் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் சாமி தரிசனத்திற்காக மலைக் கோவிலில் திரண்டுள்ளனர்.