எர்ணாவூர் மேம்பாலம் பழுதை சீரமைக்க கோரிக்கை

திருவொற்றியூரிலிருந்து எர்ணாவூர் மேம்பாலத்தை கடந்து மணலி நெடுஞ்சாலை வழியாக புதுநகர் போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்து, கன்டெய்னர் மற்றும் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என 1000 வாகனங்கள் சென்று வருகின்றன. 

இந்நிலையில் எர்ணாவூர் மேம்பாலத்தின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்வளர்த்து கிடக்கிறது. செடிகளின் வேர்கள் மேம்பாலத்தின் உட்பகுதியில் ஊடுருவி இருப்பதால் பாலத்தின் உறுதித்தன்மை வலுவிழந்திருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். அதுமட்டுமின்றி பாலத்தின் மீது உள்ள நடைபாதையும் ஆங்காங்கே பழுதடைந்து உடைந்துள்ளது. இதனால் இதன் மீது நடந்து செல்லும் பொதுமக்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சுமார் 30 ஆண்டுகள் பழமையான மேம்பாலத்தின் மீது அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் வலுவிழந்து வருகிறது. 

எனவே இந்த மேம்பாலத்தை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவ்வப்போது செடி, கொடிகளை அப்புறப்படுத்துகிறார்களே தவிர, மேம்பாலத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் இந்த பாலத்தையும், அதன் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி