திருவள்ளூரில் பெய்த மழை; பஜார் வீதியில் மக்கள் அவதி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, காக்கலூர், புட்லூர், மணவாளநகர், ஓதிக்காடு, எடப்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்து கொட்டியது. திருவள்ளூர் பஜார் வீதி, நகர காவல் நிலையம் உள்ளிட்டவைகளை மழைநீர் சூழ்ந்தது. 

திருவள்ளூர் செங்குன்றம் சாலை, பொன்னேரி செங்குன்றம் சாலை மழைநீரில் குளம் போல் ஆகியது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தச்சூர், கூட்டுசாலை, கவரப்பேட்டை, சோழவரம், காரனோடை, தாமரைப்பாக்கம், ஆரணி, செங்குன்றம், காரனோடை என மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து கொட்டியது. 

கீழானூர், விஷ்ணுவாக்கம், கரிக்கலவாக்கம் பகுதியில் இடிமின்னலுடன் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொன்னேரி செங்குன்றம் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். திருவள்ளூர் நகர காவல் நிலைய வளாகத்திலும் மார்க்கெட் பகுதியிலும் மழைநீர் புகுந்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். 

வீரராகவர் கோவில் செங்குன்றம் திருவள்ளூர் சாலையில் மழைநீர் தேங்கியது. வடக்கு ராஜவீதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். கவரப்பேட்டை காவல் நிலையம் முன்பு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கனமழை மண்ணை குளிரச் செய்தது.

தொடர்புடைய செய்தி