திருவள்ளூர்: அனைத்துதுறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் ஆட்சியர் பிரதாப் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் எம்எல்ஏக்கள் டி.ஜே. கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் குறித்தும், முன்னேற்பாடுகளைக் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான திட்டப்பணிகள் குறித்தும், முடிவுற்ற திட்டப்பணிகள் குறித்தும், விழா நேரத்திற்கு பயனாளிகளை சரியான நேரத்தில் விழாமேடைக்கு அழைத்துவருவது குறித்தும், பயனாளிகளுக்கான நலத்திட்டங்கள் அன்றே வழங்கப்படுவது குறித்தும், அவர்களுக்குத் தேவையான உணவுகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தி விழாவினை சிறப்புச் செய்ய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி