திருவள்ளூர்: இல்லாத வீட்டுக்கு வரி கேட்டு நகராட்சி தொல்லை; மக்கள் வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வீரராகவபுரம் கிராமம் காடுவெட்டி பகுதியில் (எஸ்.ஏ. இன்ஜினியரிங்) தனியார் பொறியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகம் அருகே 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வீடுகட்டி வசித்து வரும் நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு வருவாய்த் துறை சார்பில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அந்த இடத்தை அகற்றியுள்ளனர். கூலித்தொழில் செய்து பிழைத்து வரும் இவர்கள் மாற்று இடம் தருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்ததால் அருகில் வாடகைக்கு குடியேறி வீட்டுமனை தருவார்கள் என்று பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர். இடித்து அகற்றப்பட்ட இடத்திற்கு வரி செலுத்தக் கோரி திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்தனர். இருக்கும் வீட்டையும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்து தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், மாற்று இடமும் வழங்காமல் அலைக்கழித்துவிட்டு, தற்போது இல்லாத வீட்டிற்கு வரி கேட்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேட்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி