பூந்தமல்லி: டூவீலர் திருடியவர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக நசரத்பேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் நந்தம்பாக்கத்தை சேர்ந்த செல்வம் என்ற கரி என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து தலை மறைவாக இருந்த செல்வத்தை தனிப்படை போலீசார் குன்றத்தூர் அருகே கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்: பூந்தமல்லி, நசரத்பேட்டை, போரூர், மதுரவாயல், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 10 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில் டாஸ்மாக் கடைகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் பரபரப்பாக உள்ள பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்லும் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார். மேலும் கஞ்சா மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. திருடப்பட்ட வாகனங்களின் நிறங்கள் மற்றும் பதிவு எண்களை மாற்றி பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி