திருவள்ளூர்: சாலை நடுவில் இருந்த காந்தி சிலை அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காமராஜர் காய்கறி மார்க்கெட் எதிரில், பூ மார்க்கெட் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை நடுவில் காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காந்தி சிலை சாலை நடுவில் இருப்பதால் இந்த பகுதியில் சாலையோர பழ வியாபாரிகள் முதல் பூ வியாபாரிகள் வரை அனைவரும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு சாலைக்கு இடையூறாக வாகனங்களையும் நிறுத்திவிடுவதால் இதனை கடந்து திருத்தணி முருகன் கோயிலுக்கும், திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் செல்வதற்கும், திருத்தணி பேருந்து நிலையத்திற்கும் செல்ல முடியாமல் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், அரசு வாகனங்கள் என அனைவரும் கடும் அவதி அடைந்தனர். 

இந்த சிலையை அகற்றுவதற்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடத்தப்பட்டு, இந்த சிலை அகற்றுவது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியிடம் அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த காந்தி சிலையை இந்த பகுதியிலிருந்து அகற்றுவதற்காக இன்று அதிகாலை திருத்தணி டி.எஸ்.பி கந்தன், திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி, திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திருத்தணி நகராட்சி துறை அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மேற்பார்வையில் கிரேன் உதவியுடன் காந்தி சிலை அகற்றப்பட்டது. காந்தி சிலை பத்திரமாக அகற்றப்பட்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி