வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண் மீது தாக்குதல்: சிசிடிவி

மதுரவாயல் அருகே போரூர் அடுத்த மாதா நகர் மெயின் ரோடு பகுதியில் நேற்று முன்தினம்(அக்.2) இரவு 8 மணி அளவில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஊசி பாசி விற்கும் பெண்கள் பானி பூரி கடையில் பானி பூரி வாங்கி அங்கு இருந்த ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அந்த வீட்டில் வசிக்கும் நபர் அந்த பெண்களை தகாத வார்த்தையில் பேசி திட்டியதோடு ராதா என்ற நரிக்குறவ பெண்ணின் மீது தான் எடுத்து வந்த அரிசி மூட்டையை மேலே போட்டுள்ளார். பின்னர் வீட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து சரமாரியாக அந்த பெண்ணின் தலையில் தாக்குகிறார்.

அதில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுகிறார். இதனை அடுத்து அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அது தொடர்பாக தற்போது மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதால் வீட்டின் வாசலில் அமர்ந்ததற்கு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி