பொன்னேரி: ஜிஎஸ்டி வரியால் முருகனுக்கு வந்த சோதனை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆண்டார் குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி மற்றும் பிரசாதம் விற்பனை செய்ய ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொது ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஏலம் செயல் அலுவலர் ராகவன் தலைமையிலும், ஆய்வாளர் முருகன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதற்காக 37 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். 

அதன்படி இந்த ஆண்டு காணிக்கை முடிக்கு 2 லட்சத்து 92 ஆயிரமும், பிரசாத விற்பனைக்கு 12 லட்சத்து 92 ஆயிரம் ஆரம்பகட்ட தொகையாக நிர்ணயிக்கப்பட்டு, தனித்தனியே 2 விண்ணப்ப வரவேற்பு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு புதிதாக 18% ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக வைப்புத் தொகை கேட்கப்பட்டதால், காணிக்கை முடிக்கான பெட்டியில் 4 விண்ணப்பங்கள் மட்டுமே போடப்பட்டிருந்தன. 

இதனால் காணிக்கை முடி நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக 4 லட்சத்து 10 ஆயிரத்திற்கு ஏலம் போனது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக கோயில் பிரசாதம் விற்பனை செய்வதற்கான ஏலத்தை கேட்க யாரும் முன் வராததால் ஏமாற்றமடைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீண்டும் வேறொரு தேதியில் கோயில் பிரசாத விற்பனை ஏலம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி