ஆந்திர மாநிலம் கண்ட நீர் அணையிலிருந்து கடந்த 19ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை இன்று காலை 9: 21க்கு அடைந்தது. கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தத்தின் படி ஆந்திர, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் கிருஷ்ணா நதி நீரில் தத்தம் பங்கிலிருந்து தலா 5 டிஎம்சி நீரை சென்னை மாநகர குடிநீர்த் தேவைக்காக இரு தவணைகளில் வழங்க வேண்டும்.
ஆந்திராவிலிருந்து முதலாம் தவணைக்கான கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னை மாநகர மக்களின் இந்த ஆண்டு குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய உதவும் என நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர். சென்னை மண்டல நீர்வள ஆதாரத்துறை முதன்மை பொறியாளர் ஜானகி, கிருஷ்ணா குடிநீர் முதன்மை பொறியாளர் தில்லைக்கரசி உதவி செயற்பொறியாளர் சதீஷ் மற்றும் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜீரோ பாயிண்ட்டிற்க்கு வந்த கிருஷ்ணா நதி நீரை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனுடன் மலர் தூவி வரவேற்றனர்.