தூத்துக்குடி: ஆசை வார்த்தை கூறி பலமுறை உறவு; திமுக நகர செயலாளர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நகர தி.மு.க., செயலாளராக இருப்பவர் கண்ணன். இவரது கடையில், நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 34 வயதான விதவைப் பெண் மகாலட்சுமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு கணவர் இறந்த நிலையில், குழந்தையுடன் பெற்றோர் பராமரிப்பில் வசித்து வந்த மகாலட்சுமியிடம் கண்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருங்கி பழகி உள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறிய கண்ணன் மகாலட்சுமியுடன் பல முறை உறவு வைத்துள்ளார். 

இந்நிலையில், திடீரென பின்வாங்கிய அவர், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மகாலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்துள்ளனர். மேலும், 3 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு போலீசில் புகார் அளிக்காமல் சென்றுவிட வேண்டும் என மகாலட்சுமியை கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அவர் நேரில் மனு அளித்தார். அவரது உத்தரவின்பேரில், ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு கொள்ளுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி