மதுரை: குட்கா விற்பனை; குடோனாக பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி

கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தப்படுவதாக மதுரை மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் புதூர் காவல்நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்வேயர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது KA. 04 AB. 5492 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் குழந்தைகளுக்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் கோழி தீவனம் கால்நடை மருந்து பெட்டிகள் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், கணேஷ் புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்கள் 94 மூட்டைகளில் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கண்டெய்னர் லாரியை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்று லாரியில் கடத்தப்பட்டு வந்த 1400 கிலோ கூல் லிப் மற்றும் கணேஷ் புகையிலை ஆகியவற்றையும், சில்லறை விற்பனைக்காக குட்கா வாங்க வந்த நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வாகனங்களையும் புதூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

1400 கிலோ குட்கா எங்கு கொண்டு செல்லப்படுவதற்காக கடத்தப்பட்டது எனவும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி