தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் திரு உருவ படத்திற்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதற்கு முன்பாக இளைஞர்கள் ஒவ்வொரு குழுவாக உறுமி இசைக்க தேவராட்டம் ஆடிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்த நிலையில் ஒரு சில இளைஞர்கள் குழுவினர், இருசக்கர வாகனங்களில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் இரண்டு பேர், மூன்று பேர் இருசக்கர வாகனம் மீது ஏறி நின்று கொண்டு குதித்து ஆட்டம் போட்டுக்கொண்டே வந்தனர்.
இதே போல ஒரு சில கார்களிலும் அதிகளவில் ஏறிக்கொண்ட இளைஞர்கள் காரின் பின்பக்க கதவை திறந்து அப்பகுதியில் ஏறி நின்றும் ஆட்டம் போட்டனர். பேருந்து நிலையம், வைகைசாலை பிரிவு உள்ளிட்ட முக்கிய நகர்பகுதியில் வரும்போது இளைஞர்கள் இவ்வாறு ஆட்டம் போட்டு சென்றதால் அப்பகுதியை கடந்து சென்ற பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு கடந்து சென்றனர். வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாயினர்.