மன்னார்குடி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் கணேசன் மகன் ராதாகிருஷ்ணன் (55), விவசாய தொழிலாளி. இவரது நண்பர் பரவக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்த மாசிலாமணி மகன் சரவணன் (49), இருவரும் வேலைக்குச் சென்று விட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். சரவணன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.
அப்போது எதிரே வந்த சென்னை வண்ணாரப்பேட்டை முதல் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ராஜன் (49) கார் ஓட்டினார். சோழபுரம் பிரதான சாலையில் தனியார் கல்லூரி அருகே வரும்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கார் மீது மோதியது. இதில் சரவணன், ராதாகிருஷ்ணன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் சோழபுரம் காவல் நிலைய போலீசார் ராதாகிருஷ்ணன் சடலத்தை உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.