தஞ்சாவூர்: அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் முகநூலில் ஒரு சமூகம் குறித்து அவதூறாக பதிவிட்டும் ஆரலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

இது தொடர்பாக பாமக மாவட்ட செயலர் ம. க. ஸ்டாலின் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆரலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் முகநூலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து அவதூறாக தகவல்களை பதிவேற்றம் செய்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தூண்டி விடுகிறார். 

இவர் மீது கல்வித் துறையும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது, முன்னாள் பாமக மாவட்ட செயலர் கோ. ரவிச்சந்திரன், வழக்குரைஞர் இளங்கோவன் மற்றும் அணைக்கரை பகுதி பொதுமக்கள் இருந்தனர். பின்னர், கும்பகோணம் உதவி ஆட்சியர், திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் மனுக்களை கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி