தஞ்சாவூர்: பேரூராட்சியாக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதி கிராம ஊராட்சியாக இயங்கி வருகிறது. இதனை பேரூராட்சியாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சாதாரண ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக்கினால் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்படும். வரிகள் அதிகரிக்கப்படும். 
இதனால் கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் என இப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, இந்த முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பூதலூரில் சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கே. ராசகோபால் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என். வி. கண்ணன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இக்கூட்டத்தில், நாளை (டிச. 30) திங்கள்கிழமை தஞ்சாவூரில் நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாமில், ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்றும், பூதலூர் பேரூராட்சியாக ஆக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜனவரி 8 ஆம் தேதி அன்று பூதலூரில் பொதுமக்கள், ஒத்துழைக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகளைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி