திருவையாறு: தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு

திருவையாறு அருகே கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ஆர். மணிகண்டன் (47). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். இவர் திருவையாறு அருகே தனது மாமியார் ஊரான செம்மங்குடியில் கடந்த வாரம் நடைபெற்ற திருவிழாவுக்குக் குடும்பத்துடன் சென்றார். 

பின்னர் தனது தம்பி மகளை, கணபதி அக்ரஹாரத்தில் கொண்டு விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில், மணிகண்டன் மே 22 ஆம் தேதி இரவு புறப்பட்டார். செம்மங்குடி அருகே அணைக்குடி மாதா கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, கோயில் திருவிழாவுக்காகவ் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி ஜெனித்தாமேரி (50) மீது மணிகண்டனின் இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், மணிகண்டனை ஜெனித்தாமேரியின் உறவினர்கள் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த மணிகண்டன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமாகியும் மணிகண்டனைத் தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என கூறி, திருவையாறு கடைவீதியில் மணிகண்டனின் உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி