தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெஜினா நகரைச் சேர்ந்தவர் டி. ஜெயக்குமார் (49). இவர் மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் எதிரே உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகன்யா அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு உணவகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இரு மகன்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு மனைவி சுகன்யாவும் 9 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார்.
பிற்பகல் 3 மணியளவில் ஜெயக்குமார் வீட்டுக்குத் திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.