தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை தத்தெடுப்பு விதிமுறை 2017, பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் ரயில்வே நிலைய மாஸ்டர், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ஸ்ரீதரன், இருப்புப்பாதை எஸ்.ஐ.கள் பாஸ்கரன், மோகன், தனிப்பிரிவு சுரேஷ் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஓடும் ரயிலில் பெண் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு என்ற வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் ஆய்வாளர் சாந்தி, தலைமைக் காவலர் பாரதி ஆகியோர் அட்மினாக உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஓடும் ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக இந்த வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்தால் சம்பவ இடத்திற்கு அந்தந்த பகுதி ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர். இந்த வாட்ஸ்அப் குழுவில் ரயிலில் பயணிக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் குழுவில் பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.