தஞ்சை: நலத்திட்ட உதவிகள் பெற சிறப்பு முகாம்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, குடும்ப இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகைகள், மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோர்) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். 

பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் ஜன. 07 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும், பேராவூரணி வட்ட அலுவலகத்தில் ஜன. 09 (வியாழக்கிழமை) அன்றும் காலை 10 மணிக்கும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இரண்டு வட்ட அலுவலகங்களில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி