பூதலூர் தாலுகா அலுவலகம் துறைசார்ந்த பதாகை வைக்க வலியுறுத்தல்

பூதலூரில் வட்டாட்சியரகம் செயல்பட்டு வருகிறது. பூதலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்களை கொடுக்க பல்வேறு சான்றிதழ்களை பெற வட்டாட்சியரகத்தை நாடி வர வேண்டியுள்ளது. ஆனால் வட்டாட்சியரகத்தில் எந்த துறையைச் சார்ந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் பொதுமக்கள் தினம் தினம் அலைந்து திரிகின்றனர். 

வட்டாட்சியரகத்திற்கு கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய வயதானவர்கள் மற்றும் பொதுமக்களில் படிப்பறிவற்றவர்கள் தான் அதிகம். இவர்கள் எளிதில் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் எவ்வித பதாகைகளும் வைக்கப்படவில்லை. வட்டாட்சியரக நுழைவு வாயிலில் அனைவரும் பார்த்து படித்து தெரிந்துகொள்ளக்கூடிய துறை சார்ந்த பெயர் பதாகையும் வைக்கப்படவில்லை. 

யாரிடம் கேட்டாலும் அதற்கு சரியான பதில் கிடைக்காமல் நாள் முழுவதும் காலை கடுக்க நின்று விட்டு செல்வதாகவும், பல மாதங்கள் வரை அலைய விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். உடனடியாக பூதலூர் வட்டாட்சியரகத்தில் துறை சார்ந்த பெயர் பதாகை வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி