பாபநாசம்: பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மாணவர்களின் அவல நிலை

பாபநாசம் அருகே மேலவழுத்தூர் ரயில்நிலைய புதுத்தெருவில் அரசு ஆதிதிராவிடர் நலநடுநிலைப்பள்ளி சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் வழுத்தூர், காமராஜபுரம் ரயில்நிலைய புதுதெரு, செருமாக்கநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்ற இந்தப் பள்ளியில் தற்போது 45 மாணவ மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. மற்றொரு கட்டிடம் சிதிலமடைந்து முட்புதர்கள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முறையான பாதுகாப்பான கழிவறை வசதிகள் இல்லை. எனவே, பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் அட்டையால் மேற்கூரை வேயப்பட்ட ஒரே ஒரு வகுப்பறையில் மட்டுமே வகுப்புகள் நடந்து வந்தன. 

தற்போது இந்தப் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாணவ மாணவிகள் பள்ளி அருகில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கிறார்கள். மாணவ மாணவிகளுக்கு குடிநீர் வசதியும் பாதுகாப்பான கழிவறை வசதியும் இல்லை. மேலும் வகுப்பறை அருகில் பாம்பு மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இந்தப் பள்ளியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி