தஞ்சாவூா்: ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை மாலை தனியார் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

வலங்கைமான் வட்டம், உத்தாணி கிராமம், தெற்குத் தெருவில் வசித்து வருபவர் புண்ணியமூர்த்தி மனைவி வனிதா மணி (39). இவர், பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வனிதாமணி திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். 

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருப்பாலைத்துறை கிராமம் அருகேயுள்ள வாட்டர் சர்வீஸ் நிலையம் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் வனிதாமணி கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி