திருவோணம்: புகையிலைப்பொருட்கள் பதுக்கி விற்பவர்களை கைது செய்ய கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளியூர்களிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் லாரியில் கடத்திவந்து குடோன் பகுதியில் மற்றும் கிராமப்புறங்களில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் பதுக்கப்படுகிறது. 

அங்கிருந்து திருவோணம், ஊரணிபுரம், நம்பிவயல் கரம்பக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பணம்வைத்து சூதாட்டம் நடைபெறும் கூடங்களுக்கு சென்று மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை நடைபெற்றுவருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். 

போதைப்பொருட்கள் இப்பகுதியில் கேட்டநேரத்தில் கிடைப்பதால் ஏராளமான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சமூகவிரோத செயலில் ஈடுபட்டுவருகின்றனர். இப்பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கிவைத்து கடைகளுக்கு விற்பனைசெய்யும் நபர்கள்மீது போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி