தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கல்

தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் பாசன பகுதிக்கு சீமா பொது காப்பீட்டு நிறுவனம், காவிரி வெள்ளாறு பாசன பகுதிக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் பயிர் காப்பீடு பிரிமியம் வசூலித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய புயல், டிசம்பர் மாதம் பெய்த அதிக மழை காரணமாக சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கல்லணை கால்வாய் பகுதி விவசாயிகளுக்கு சீமா நிறுவனம் இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 44.91 கோடியை கடந்த வாரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்தது. 

இதேபோல காவிரி, வெள்ளாறு பாசனப் பகுதி 267 கிராம விவசாயிகளுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.51 கோடி 12 லட்சத்து 70 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு வாரங்களில் வரவு வைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. காலம் தாழ்த்தி குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு ரூபாய் 8.65 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சம்பா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக மொத்தம் ரூபாய் 104.68 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி