நாஞ்சிக்கோட்டை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை மேரீஸ் கார்னரில் இருந்து நாஞ்சிக்கோட்டைக்கு முக்கிய சாலை செல்கிறது. இதன் வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை, வேங்கராயன்குடிகாடு, ஆதனக்கோட்டை, ஈச்சங்கோட்டை, பாச்சூர், வெட்டிக்காடு, ஆத்தங்கரைபட்டி, செல்லம்பட்டி, குருங்குளம், ஒரத்தநாடு, திருவோணம் வழியாக பட்டுக்கோட்டை, கரம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு புறநகர், நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 நாஞ்சிக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள் இருசக்கர வாகனங்களில் தினமும் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக தஞ்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகின்றன. 

அந்த பகுதியில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இந்த பகுதியில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக் கிடந்து போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி