பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை திருடிய மூவர் கைது

தஞ்சை பாரதி நகர் 8வது குறுக்கு தெரு விரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலியமூர்த்தி (72). இவர் வீட்டை பூட்டிக் கொண்டு தனது மனைவியுடன் உறவினர் வீட்டு திருமணத்துக்காக நாகை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு 7 பவுன் நகை, ரொக்கம் ரூ. 40 ஆயிரம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன.

மேலும் பூஜை அறையில் இருந்த உண்டியலும் காணாமல் போனது. கொள்ளையர்களை பிடிக்க டவுன் டி. எஸ்பி சோமசுந்தரம் தலைமையில் மருத்துவ கல்லூரி இன்ஸ்பெக்டர் சந்திரா உள்ளிட்ட தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி வெல்லக்குடி கவனை தெருவை சேர்ந்த குமரேசன் என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் கலியமூர்த்தி வீட்டில் திருடியதை குமரேசன் ஒப்புக் கொண்டார்.

மேலும் இதில் சம்பந்தப்பட்ட கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த கன்னியாகுமரி மாவட்டம் பாலன்விளை குன்னக்காடுவை சேர்ந்த வேல்முருகன், கர்நாடகா கோலார் மாவட்டம் இருதயபுரத்தை சேர்ந்த கேஜிஎப் (எ) நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதில் குமரேசன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் திருவாரூர் டவுன் பகுதியில் கோயிலில் இருந்த அய்யப்பன் சிலையை திருடியதையும், மன்னார்குடியில் ஒரு வீட்டின் லாக்கரை திருடிச் சென்று திருத்துறைப்பூண்டி அருகே ஏரியில் வீசி சென்றதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி