தென்காசி: யானைகளால் கரும்புத் தோட்டங்கள் சேதம்.. விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டம் சிவகிரி, ராயகிரி, உள்ளாா், ராசிங்கப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, நெல், மா, வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது.

வனத்துறையினா் விரட்டியடிக்க முயன்றாலும் அவை வேறொரு பகுதி வழியாக விளைநிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. விளைநிலங்களுக்குள் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் வேலிகளையும் அவை சேதப்படுத்துவதால் தாங்கள் செய்வதறியாத நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் மலையடிவாரத்திலிருந்து சுமாா் 2 கி. மீ. தொலைவில் உள்ள உள்ளாா், திருமலாபுரம், குலசேகரப்பேரி பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புத் தோட்டங்களுக்குள் இரவு யானைகள் புகுந்து சேதப்படுத்தினவாம்.

இதுகுறித்து விவசாயி கூறியது: மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் சில மாதங்களாக யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து கரும்பு, தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்துகின்றன.

சுமாா் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. அவற்றை வனத்தின் உள்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி