தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, நடைபெற்றது.
முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் அடிவாரத்தில் புனரமைக்கப்பட்ட சிவபெருமான், கிருஷ்ணர், சரஸ்வதி, லட்சுமி சன்னதியிலும், 27 நட்சத்திர மரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தோர் விரைந்து நலம் பெறவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.