பழைய குற்றாலத்தில் ஆட்டோ- வேன் மோதி விபத்து

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் புதன்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். சென்னை அம்பத்துரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக குற்றாலத்தைச் சேர்ந்த அழகிரி என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். 

சிவகங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு, அங்கிருந்து ஒரு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது வேன் மோதி, எதிரே வந்த ஆட்டோ மீதும் மோதி வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் வந்தவர்களும், ஆட்டோவில் வந்தவர்களும் பலத்த காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தில், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அலாவுதீன் மனைவி யாஸ்மின் (53) உயிரிழந்தார். பின்னர், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அங்கு அலாவுதீன் (60) உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி