தென்காசி: மணல் எடுப்பதில் முறைகேடு; 3 பேர் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், மாறாந்தை சோதனைச் சாவடியில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக குளத்து மண்ணை ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தார். 

அந்த டிராக்டரில் மண் எடுத்துச் செல்லப்படும் நேரம் அனுமதி சீட்டில் தவறாக இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கோட்டாட்சியர் லாவண்யா, மாறாந்தை கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்து, டிராக்டரை ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் அங்கு சென்று டிராக்டரை காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, அதன் ஓட்டுநர் பார்த்திபன் காவல் நிலையத்துக்கு டிராக்டரை ஓட்டாமல் அதிலிருந்து மண்ணை தனிநபரின் பயன்பாட்டுக்குக் கொட்டிவிட்டதாகத் தெரிகிறது. 

அங்கு வந்த வழக்குரைஞர் ரமேஷ் பால்துரை, அவரது தந்தை தானியேல் தாமஸ் ஆகியோர் டிராக்டரை எப்படி தடுத்து நிறுத்தலாம் எனக் கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். 

டிராக்டரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குரைஞர் ரமேஷ் பால்துரை, அவரது தந்தை தானியேல் தாமஸ், டிராக்டர் ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி