சிவகங்கை: மினி லாரி டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி சத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழைய இரும்பு பொருட்கள் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உதவியாளர் இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். 

சிதம்பரத்திலிருந்து திருச்சி வழியாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடிக்கு மினி வேனில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் முத்துராஜ் உதவியாளர் கோவிந்தகுமார் ஆகிய இருவரும் வந்துள்ளனர். 

அப்போது புழுதிபட்டி சத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்தபோது மினி வேன் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையிலே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநருக்கு கையில் காயமும் உதவியாளருக்கு தலையில் அடிபட்டு காயமும் ஏற்பட்டது. 

உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மினிவேனை சாலை ஓரமாக அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி