சிவகங்கை: மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராமப் பொதுமக்கள் மற்றும் காட்டாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவப் பருந்து இளைஞர்கள் இணைந்து மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 2ஆம் ஆண்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப்பந்தயம் நடைபெற்றது. 

திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாகப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய மாட்டுப் பிரிவில் 19 ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டுப் பிரிவில் 32 ஜோடிகள் என மொத்தம் 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டுக்கு 7 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டன. 

சீறிப்பாய்ந்துசென்ற மாட்டுவண்டிப் போட்டியினை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசும், வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி