சிவகங்கை: காவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

குழந்தைகள் நலக் காவலர்கள் பிற குழந்தைகளை தங்கள் குழந்தைகளைப் போல் நடத்த வேண்டும் என்றார் முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து குழந்தைகள் நலக் காவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை நடத்தியது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்பகலில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி முன்னிலை வகித்தார். 

முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தலைமை வகித்து பேசியதாவது: காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகளை காவலர்கள் தங்களது குழந்தைகளைப் போல் நினைத்து அவர்களிடம் அன்பாக பேசி, அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். குழந்தைகள் கைபேசி உபயோகிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நீதிபதி அறிவொளி. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர். கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் என். செந்தில்முரளி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல். பிரான்சிஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி வி. ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. அனிதாகிறிஸ்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி