சிவகங்கை: வேலை நிறுத்தப் போராட்டம்; வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், ஊராட்சி ஒன்றிய, ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். 

ஊராட்சி செயலராகப் பணியாற்றி 1996-க்குப் பிறகு இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர்களுக்கு ஊராட்சி செயலர் பணிக் காலத்தை 50% ஓய்வூதியத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கணினி உதவியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும். 

இந்தத் திட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி